வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது.
முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை.
பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார்.